வில்லிவாக்கத்தில் கார் டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்

வில்லிவாக்கத்தில் கார் டிரைவரை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-09-10 22:45 GMT
செங்குன்றம்,

சென்னை வில்லிவாக்கம் பாலராமபுரம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 42). இவர் ரெயில்வே சங்க தலைவர் புதியவன் என்பவருக்கு கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவரது தம்பிக்கு ரெயில்வேயில் வேலைவாங்கி தருவதாக க்கூறி பாஸ்கரிடம், புதியவன் பணம் வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி தராததால் கோபமடைந்த பாஸ்கர், கடந்த வருடம் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த புதியவனை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தார். இது தொடர்பாக, பாஸ்கர் உள்ளிட்ட 3 பேரை வில்லிவாக்கம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

அப்போது பாஸ்கர் சிறைக்கு செல்வதற்கு முன்பு புதியவனின் மனைவி மற்றும் அவரது மைத்துனர் சுபாஷ் ஆகியோரிடம் ஏமாற்றிய பணத்தை திருப்பி தராவிட்டால் சிறையில் இருந்து வந்த பின்பு அவர்கள் 2 பேரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பாஸ்கர் சிறையில் இருந்து வெளியே வந்தார். இதையறிந்த புதியவனின் மனைவி மற்றும் அவரது மைத்துனர் சுபாஷ் ஆகியோர் பாஸ்கரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற பாஸ்கர், வேலையை முடித்துக்கொண்டு நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வில்லிவாக்கம் சிந்தாமணி கடை அருகே நடந்து வந்த போது, அங்கு இருந்த 5 பேர் கொண்ட கும்பல் பட்டாக்கத்தியுடன் பாஸ்கரை விரட்டி சென்றது. இதனால் உயிரை கையில் பிடித்தவாறு, பாஸ்கர் தலைத்தெறிக்க ஓடினார். அதன் பின்னர், அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த பட்டா கத்திகளால் பாஸ்கரின் கால், தலை, கைகள் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார்.

பாஸ்கர் இறந்ததை உறுதி செய்து கொண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து தகவல் அறிந்து அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துசாமி, வில்லிவாக்கம் உதவி கமிஷனர் அகஸ்டின் பால் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அதன்பின்னர், கொலையுண்ட பாஸ்கரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உள்ளிட்டவை வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த கொலை குறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் கொலைக்கு காரணமான தலைமறைவாக உள்ள 5 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்