விருத்தாசலத்தில் நடந்த திருமண விழாவில் பரபரப்பு, மணமக்களுக்கு பரிசாக வந்த தங்க காசு திருட்டு

விருத்தாசலத்தில் நடந்த திருமண விழாவில் மணமக்களுக்கு பரிசாக வந்த தங்க காசு திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2019-09-11 22:45 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவருக்கு விருத்தாசலம் ஜங்சன் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் தாலி கட்டி முடித்தவுடன் சடங்கு சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அப்போது மாப்பிள்ளை, பெண்ணுக்கு உறவினர்கள் திருமண பரிசாக அளித்த நகைகள் மற்றும் பொருட்களை மணமேடையில் இருந்த அவர்களது இருக்கையில் வைத்திருந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு அவற்றை மணமக்கள் எடுத்து பார்த்தனர். அப்போது திருமண பரிசாக வந்த 2 பவுன் காசை காணவில்லை.

இதுபற்றி மணிகண்டன் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் மணமேடை முழுவதும் தேடிப்பார்த்தும் தங்க காசு கிடைக்கவில்லை. பின்னர் திருமண விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியில் ஏதேனும் பதிவாகி இருக்கிறதா என்று பார்த்தனர். அதில், சிறுவன் ஒருவன் மணமக்களுக்கு பின்னால் சென்று, அங்கிருந்த தங்க காசை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்லும் கட்சி பதிவாகி இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த திருமண வீட்டார், உடனடியாக விருத்தாசலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் வீடியோ காட்சியையும் கைபற்றி அதன் மூலம் அந்த சிறுவன் யார்? எந்த ஊரை சேர்ந்தவன்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருமண மண்டபத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்