வறுமை காரணமாக ஏரியில் குதித்து தாய், மகள் தற்கொலை - ஊட்டியில் பரிதாபம்

ஊட்டியில் குடும்ப வறுமை காரணமாக தாய், மகள் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2019-09-11 22:30 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (வயது 25). இவரது மகள் ஹரிதா(5). நிர்மலாவின் கணவர் மலர்வணன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கணவன் இறந்து விட்டதால் நிர்மலா தினமும் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இருந்தாலும் போதிய வருமானம் இல்லை என்று தெரிகிறது.

ஹரிதா லவ்டேலில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தார். எதிர்காலத்தில் பெண் குழந்தையை எப்படி படிக்க வைப்பது என்பதை நினைத்து நிர்மலா மன வருத்தம் அடைந்தார். இதை பற்றி அவ்வப்போது நினைத்து, நினைத்து மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நிர்மலா மகள் ஹரிதாவை துப்பட்டாவால் கட்டிக்கொண்டு ஊட்டி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் ஏரியில் அவர்கள் இருவரின் பிணங்கள் மிதப்பதை பார்த்து படகு இல்ல ஊழியர்கள் ஊட்டி நகர மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஹரிதா பள்ளி சீருடையில் பிணமாக மிதந்தார். விசாரணையில் குடும்ப வறுமை காரணமாக நிர்மலா தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனமுடைந்த தாய் ஒன்றும் அறியாத சிறுமியை கட்டி குதித்து இறந்த சம்பவத்தால் அக்கம்பக்கத்தினர் சோகத்தில் மூழ்கினர்.

ஊட்டி ஏரியில் கடந்த சில மாதங்களில் மட்டும் 8-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். 

மேலும் செய்திகள்