தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் மேலூர் அருகே பரபரப்பு

மேலூர் அருகே திருமண விழாவில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-09-11 23:00 GMT
மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவருடைய மகன் கருப்பசாமி(வயது 22). இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனையொட்டி பத்திரிகை அடித்து திருமண ஏற்பாடுகள் நடந்தன. மேலும் திருமண நாளையொட்டி பந்தல் அமைத்தும், ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு, வாழ்த்து பிளக்ஸ் பேனர்களை வைத்தும் தடபுடலாக விழா ஏற்பாடுகள் நடந்தன.

திருமண விழாவையொட்டி நேற்று காலை உறவினர்கள், கிராமத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர். மணமகள் வீட்டார் சார்பில் சீர்வரிசை பொருட்கள் அனைத்தும் கொண்டு வரப்பட்டன. திருமண விழாவில் மணமேடை தயாராகி அனைவரும் மணமகன் கருப்பசாமிக்காக காத்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. எனினும் முகூர்த்த நேரம் நெருங்கியதால் மணமகள் மேடைக்கு வந்தார். ஆனாலும் தாலிகட்டும் கடைசி நிமிடம் வரை கருப்பசாமி மணமேடைக்கு வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தேடியபோது மணமகன் தப்பியோடி தலைமறைவானது தெரியவந்தது. திருமணமும் நின்றுபோனதால் மணமகள் வீட்டார் தவித்தனர். சோகத்தில் உறவினர்களும் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து திருமணம் பேசி முடித்து ஏமாற்றிவிட்டதாகவும், மணமகன் கருப்பசாமியை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் வீட்டார் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

கருப்பசாமியும், அந்த இளம்பெண்ணும் ஏற்கனவே காதலித்து வந்துள்ளனர். ஆனால் அவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் 2 பேரின் பெற்றோர் களும் பேசி திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். அப்போது கருப்பசாமி குடும்பத்தினர் வரதட்சணை வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர், தற்போது இல்லை, திருமணம் முடிந்து தருவதாக கூறியதாக சொல்லப்படுகிறது. இதன்காரணமாக திருமணம் நின்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்