மாடியில் இருந்து குதித்து ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை - காதல் விவகாரம் காரணமா? போலீசார் விசாரணை

மாடியில் இருந்து குதித்து ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரம் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-09-11 22:30 GMT
திருச்சி, 

திருச்சியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் முகமது ஆரிப்(வயது 24). இவர் கடந்த 9-ந் தேதி இரவு தென்னூரில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது நள்ளிரவு 12.30 மணி அளவில் மதுபோதையில் வீட்டின் 2-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், படுகாயத்துடன் கிடந்த முகமதுஆரிப்பை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தியபோது, முகமதுஆரிப் தனியாக வசித்து வந்ததும், அவருடைய தம்பி மலேசியாவில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

மேலும், காதல் விவகாரம் காரணமாக அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் எனவும் தெரியவந்தது. இதையடுத்து மலேசியாவில் இருந்து திருச்சி வந்த அவரது தம்பியிடம் போலீசார் உடலை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்