தனித்தனி விபத்தில், தொழிலாளி உள்பட 2 பேர் சாவு

தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2019-09-11 22:30 GMT
மயிலம், 

மயிலம் அருகே உள்ள வி.பாஞ்சாலம் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் மகன் சாமிக்கண்ணு (வயது 35), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருந்து புறப்பட்டு பாதிராப்புலியூர் கிராமத்திற்கு பஸ்சில் சென்று இறங்கினார். பின்னர் அவர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற கார் ஒன்று சாமிக்கண்ணு மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுபற்றி தகவல் அறிந்த மயிலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான சாமிக்கண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கராபுரம் அருகே உள்ள சின்னமணியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் முருகன் (24). இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து சங்கராபுரத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். 

விக்கிரவாண்டியை அடுத்த பாப்பனப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் முருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்