நாளை மறுநாள் முதல் மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் தினசரி இயக்கப்படும் மேற்கு ரெயில்வே தகவல்

மும்பையில் நாளை மறுநாள் முதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் தினசரி இயக்கப்படும் என மேற்கு ரெயில்வே வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.

Update: 2019-09-11 23:30 GMT
மும்பை,

மும்பையில் நாளை மறுநாள் முதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் தினசரி இயக்கப்படும் என மேற்கு ரெயில்வே வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.

ஏ.சி. மின்சார ரெயில்

மும்பையில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. சர்ச்கேட் - போரிவிலி, விரார் இடையே தினசரி 12 சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் மேலும் இரண்டு மின்சார ரெயில்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளன. இதில் இரண்டாவது ஏ.சி. மின்சார ரெயில் அக்டோபர் முதல் வாரத்தில் பயன் பாட்டுக்கு வருகிறது.

தினசரி இயக்கப்படும்

தற்போது, ஏ.சி. மின்சார ரெயில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தின் 7 நாட்களிலும் ஏ.சி. மின் சார ரெயிலை இயக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஏ.சி. மின்சார ரெயிலை தினசரி இயக்க மேற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளது. அதன்படி நாளை மறுநாள்(14-ந் தேதி) முதல் ஏ.சி. மின்சார ரெயில் தினசரி இயங்க உள்ளதாக மேற்கு ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

மேலும் செய்திகள்