பெண்களிடம் நகை பறித்த 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

பெண்களிடம் நகை பறித்த வழக்கில் பிடிபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-09-12 22:15 GMT
சிவகங்கை, 

சிவகங்கை நகர் நாட்டரசன்கோட்டை, பெருமாள்பட்டி, காளையார்கோவில், குளகட்டபட்டி, இளையான்குடி, பிராமணக்குறிச்சி, மானாமதுரை, மொட்டையன்வயல், சிங்கம்புணரி, ஓரியூர், தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை ரோட்டில் நடந்து சென்ற பெண்கள் மற்றும் கடையில் தனியாக இருந்த பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் கத்தி மற்றும் வாள் ஆகியவைகளை காட்டி மிரட்டி கழுத்தில் கிடந்த நகைகளை பறித்து சென்றனர்.

இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் கடந்த ஜூலை மாதம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்த சி.கே.மங்கலத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது 48), சிவகங்கையை சேர்ந்த நூர்முகமது (25), மதுரை கே.புதூர் சூரியா நகரை சேர்ந்த பாலா என்ற பாலசந்திரன் (35) மற்றும் திருப்பூர் மதுக்களத்தை சேர்ந்த சூரியா (25) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன், கலெக்டர் ஜெயகாந்தனுக்கு பரிந்துரை செய்தார். அதைத்தொடர்ந்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டதின் பேரில் 4 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்