தங்கும் விடுதிகளில் விபசாரம்: புரோக்கர் உள்பட 15 பேர் சிறையில் அடைப்பு 9 அழகிகள் மீட்பு

புதுச்சேரியில் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி விபசார புரோக்கர்கள் உள்பட 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 9 அழகிகளை மீட்டனர்.

Update: 2019-09-12 23:22 GMT
புதுச்சேரி,

புதுவை நகர பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் விபசாரம் கொடிகட்டி பறப்பதாக போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவாவுக்கு புகார் வந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகன்ஷா யாதவுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அகன்ஷா யாதவ் தலைமையில் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் அதிரடிப்படை போலீசார் நேற்று முன்தினம் புதுவை நகர பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது 100 அடி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் விபசாரம் நடத்த உடந்தையாக இருந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த டெல்லிபாபு, மேலாளர் ரமேஷ் (41), கரசூர் செல்வம் (26), துரைராஜ் (37), தட்டாஞ்சாவடி சுந்தர், சென்னை அண்ணாநகர் ஜெசிந்தா (26) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அங்கிருந்து 4 அழகிகள் மீட்கப்பட்டு உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

காமராஜர் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் ஒரு அழகியை மீட்டனர். அங்கிருந்த தட்டாஞ்சாவடி ரவிசங்கர்(45), நெல்லித்தோப்பு சிவசங்கர்(34), கருணாகரன்(40), ராஜாநகர் ரஞ்சித்குமார்(40) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரத்தை சேர்ந்த பாண்டியன் தலைமறைவாகி விட்டார்.

ரெட்டியார்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து 2 அழகிகள் மீட்கப்பட்டனர். அங்கிருந்த உருளையன்பேட்டை வேலுமணி (68), தேங்காய்திட்டு புதுநகர் ராஜேஷ் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். எல்லைப்பிள்ளை சாவடியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து 2 அழகிகள் மீட்கப்பட்டனர். விபசாரம் நடத்தியதாக வடலூரை சேர்ந்த செல்வம் (38), தேங்காய்திட்டு நாகராஜ் (31), ஓட்டல் ஊழியர் கம்பன் நகரை சேர்ந்த பாலமுருகன் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மொத்தம் 9 அழகிகள் மீட்கப்பட்டனர். இதில் ஒருவர் 17 வயது உடைய கல்லூரி மாணவி ஆவார். அழகிகள் 9 பேரும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 15 பேரும் புதுவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்