விருத்தாசலம் அருகே, பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி - மர்மநபர்கள் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

விருத்தாசலம் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-09-12 22:30 GMT
கம்மாபுரம்,

விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி ராஜலட்சுமி(வயது 19). இவர் நேற்று மதியம் தனது மொபட்டில் கார்குடலில் இருந்து கோ.ஆதனூரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கோ.மாவிடந்தல் ஏரி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென ராஜலட்சுமியின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். இதில் சுதாரித்துக்கொண்ட ராஜலட்சுமி, தனது காலால், அந்த மர்மநபர்களின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார்.

இதில் நிலை தடுமாறியதில் மர்மநபர்கள் 2 பேர் மற்றும் ராஜலட்சுமி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர். உடனே மர்மநபர்கள் விரைந்து வந்து ராஜலட்சுமியின் கழுத்தில் கிடந்த நகையை மீண்டும் பறிக்க முயன்றனர். இதற்கிடையே அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும், அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே ராஜலட்சுமியின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த கம்மாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்