உவரி கடலில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள்-போலீசார் சிறைபிடிப்பு 121 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு

உவரி கடலில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளும், போலீசாரும் சிறைபிடிக்கப்பட்டனர். இதுதொடர்பாக 121 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2019-09-13 22:00 GMT
திசையன்விளை, 

உவரி கடலில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளும், போலீசாரும் சிறைபிடிக்கப்பட்டனர். இதுதொடர்பாக 121 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதிகாரிகள் சிறைபிடிப்பு

நெல்லை மாவட்டம் உவரியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மூலம் மீன் பிடிப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் கூத்தங்குழியில் இருந்து கடல் மார்க்கமாக ஒரு படகில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் மற்றும் கூடங்குளம் கடலோர காவல்துறை அதிகாரிகள் சென்று, உவரி கடல் பகுதியில் சுருக்குமடி வலை மூலம் மீன்பிடிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை அதிகாரிகள் புகைப்படம் எடுத்தனர். இதனை கண்ட மீனவர்கள், படகையும், அதில் இருந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரையும் சிறைபிடித்து கரைக்கு அழைத்து வந்தனர்.

121 பேர் மீது வழக்கு

பின்னர் அவர்கள், அங்குள்ள பங்குத்தந்தை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆலய மணி அடிக்கப்பட்டு ஊர் கூட்டம் நடைபெற்றது. அப்போது மீனவர்கள் அதிகாரிகளிடம், “தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை வைத்து நாங்கள் மீன்பிடிக்கவில்லை. வளையம் பொருத்திய வீச்சு வலை மூலமாகவே மீன்பிடித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர். பின்னர் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக உவரியை சேர்ந்த திலிப், சுரேஷ், குமார், ஜஸ்டின், நியூட்டன், கிளாசிக், லிவிங்ஸ்டன், எர்மண்ட், ராபர்ட், நிக்சன் உள்பட 121 மீனவர்கள் மீது கூடங்குளம் கடலோர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க செல்லவில்லை

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று உவரியில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்