தாய் இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

தாய் இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-09-14 23:15 GMT
பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மேலசெம்மங்குடி குடியான தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன்(வயது 37). டிரைவரான இவர், சொந்தமாக கார் வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கஜேந்திரனின் தாயார் சிவகாமி உடல் நிலை சரியில்லாத நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த 12-ந் தேதி சிகிச்சை பலன் இன்றி இறந்து விட்டார்.

இதனால் கஜேந்திரன் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தார். தாயார் இறந்ததற்கு பின்னர் கஜேந்திரன், பாபநாசம்-சாலியமங்கலம் சாலையில் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தார். நேற்று காலை அவருடைய நண்பர்கள் அவரை பார்ப்பதற்காக விடுதிக்கு வந்தனர். அப்போது அவருடைய அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

தூக்கில் தொங்கினார்

நீண்ட நேரமாக கதவை தட்டியும் அறைக்குள் இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நண்பர்கள், விடுதி மேலாளரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாபநாசம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மற்றும் போலீசார் அங்கு சென்று அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அறையில் உள்ள குளியல் அறையில் தூக்கில் கஜேந்திரன் பிணமாக தொங்கினார். இதையடுத்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தாய் இறந்த சோகத்தில் கஜேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

விசாரணை

இதுகுறித்து கஜேந்திரன் மனைவி சத்யா கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய் இறந்த சோகத்தில் டிரைவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்