மின்சாரம் தாக்கி மின்ஊழியர் சாவு நிவாரணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல்

சுவாமிமலை அருகே மின்சாரம் தாக்கி மின்ஊழியர் இறந்தார். நிவாரணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-14 23:00 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள ஏரகரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது32). இவருடைய மனைவி கோகிலா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். செல்வம் சுவாமிமலை மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.

நேற்று சுவாமிமலை அருகே கோணகரை பகுதியில் மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை செல்வம் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது புளியம்பாடி காலனி தெருவை சேர்ந்த தற்காலிக மின் ஊழியர் பாலகிருஷ்ணன் (38) என்பவர் மின்கம்பத்தின் கீழ் நின்று கொண்டிருந்தார்.

மின்சாரம் தாக்கியது

மின்கம்பத்தில் பழுது நீக்கியபோது செல்வத்தை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் மின்கம்பத்தில் இருந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதை பார்த்த பாலகிருஷ்ணன் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து விட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்த சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் செல்வம் மறைவுக்கு நிவாரணம் கேட்டு அவருடைய மனைவி கோகிலா மற்றும் உறவினர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கும்பகோணம் தாசில்தார் பாலகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் ஆகியோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது நிவாரணம் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதி அளித்தார். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

மறியல் காரணமாக அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்