மோட்டார் சைக்கிள் விபத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி பலி

மார்த்தாண்டத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-09-14 22:15 GMT
குழித்துறை,

குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ்குமார் (வயது 52). இவர் பொதுப்பணித்துறையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

சம்பவத்தன்று சுரேஷ்குமார் மார்த்தாண்டம் அருகே உறவினர் ஒருவரின் ஈமச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் அருகே சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் சுரேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

பரிதாப சாவு

அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி சுரேஷ் குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்