உல்லாச பயணத்திற்காக கார், மோட்டார் சைக்கிள்களை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது

உல்லாச பயணத்திற்காக கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-14 22:42 GMT
மும்பை, 

உல்லாச பயணத்திற்காக கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கார் திருட்டு

மும்பையை சேர்ந்தவர் நிலேஷ். சினிமா துறையில் இருந்து வருகிறார். சம்பவத்தன்று தாதர் சிவாஜிபார்க் கட்டிடத்தின் அருகே நிறுத்தி இருந்த இவரது கார் ஒன்று காணாமல் போய் இருந்தது. இது பற்றி அவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சில நாள் கழித்து தாதரில் உள்ள வாகன பணிமனையில் திருட்டு போன கார் நின்று இருந்தது தெரியவந்தது. இதனை கண்ட நிலேஷ் அங்கு சென்று ஊழியரிடம் நடத்திய விசாரணையில் தம்பதி காரை விட்டு சென்றதாகவும், மறுநாள் காலையில் வந்து எடுத்து செல்வதாக கூறிவிட்டு சென்றதாக தெரிவித்தார்.

2 பேர் கைது

இதுபற்றி அவர் போலீசில் தகவல் தெரிவித்தார். இதன்படி போலீசார் அப்பகுதியில் சென்று கண்காணித்து வந்தனர். அப்போது தம்பதி காரை எடுக்க வந்தபோது போலீசார் விரைந்து சென்று அவர்களை பிடித்தனர். விசாரணையில், அவர்கள் வில்லேபார்லேயை சேர்ந்த பாரஸ் (வயது33), அவரது தோழி தஸ்னிம் (38) என்பதும், உல்லாச பயணம் மேற்கொள்வதற்காக கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கள்ளச்சாவி மூலம் திருடி வந்தது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் இருந்த திருட்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்