கடலூர் பயணி ரெயிலில் தவறவிட்ட ரூ.2½ லட்சம் கரூரில் மீட்பு

கடலூர் பயணி ரெயிலில் தவறவிட்ட ரூ.2½ லட்சம் கரூரில் மீட்கப்பட்டது.

Update: 2019-09-15 23:00 GMT
கரூர்,

கடலூர் மாவட்டம், ஆபத்தாரனபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் தயானந்தன் (வயது 50). கார் டிரைவரான இவர், நேற்று முன்தினம், மங்களூர் செல்வதற்காக விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து புதுச்சேரி-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லா பெட்டியில் ஏறி மங்களூருக்கு பயணம் செய்தார். இரவில் அந்த ரெயில், திருச்சி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

அப்போது ரூ.2½ லட்சத்துடன் தான்கொண்டு வந்திருந்த பையை ரெயிலிலேயே மறந்து வைத்து விட்டு, கீழே இறங்கிய தயானந்தன் அங்குள்ள ஒரு கடையில் டிபன் வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தார். இந்தநிலையில் நேரமாகிவிட்டதால் அந்த எக்ஸ்பிரஸ் ரெயிலானது அங்கிருந்து புறப்பட்டு செல்ல தொடங்கியது. உடனே வேகமாக சாப்பாடு பொட்டலத்தை கீழே போட்டு விட்டு, ரெயிலை பிடிக்க தயானந்தன் அலறி அடித்து கொண்டு ஓடினார். எனினும் அந்த ரெயிலானது அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது.

ரூ.2½ லட்சம் மீட்பு

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற தயானந்தன், அங்கிருந்த சக பயணிகள் உதவியுடன் ரெயில் நிலைய உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விளக்கமாக எடுத்து கூறினார். உடனே ரெயில்வே உதவி மையத்திலிருந்து, கரூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, புதுச்சேரி-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட பணப்பையை மீட்டெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் திருச்சியிலிருந்து புறப்பட்ட அந்த எக்ஸ்பிரஸ் ரெயில், கரூர் ரெயில் நிலையத்தை அடைந்ததும், கரூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி மற்றும் போலீசார் உடனடியாக தயானந்தன் பயணித்த முன்பதிவில்லா பெட்டியில் சோதனை நடத்தி பணப்பையை மீட்டனர்.

போலீசார் ஒப்படைத்தனர்

இதையறிந்ததும் திருச்சியிலிருந்து பஸ் மூலம் புறப்பட்டு கரூர் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தயானந்தன் வந்தார். பின்னர் அவரிடம் உரிய விசாரணை மேற்கொண்ட போலீசார், பணப்பை அவருடையது தானா? என்பதை உறுதிப் படுத்தியப்பின், அதனை ஒப் படைத்தனர். அப்போது ரெயில்வே போலீசாருக்கு தயானந்தன் நன்றி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்