மொபட்-மினி லாரி மோதல்; பெண் சாவு தாயின் உடலை 2 மணி நேரமாக நடுரோட்டில் வைத்து கதறிய மகன்

திருவெறும்பூர் அருகே மொபட்- மினி லாரி மோதிய விபத்தில் பெண் தலைநசுங்கி உயிரிழந்தார். அவருடைய உடலை 2 மணி நேரமாக நடுரோட்டில் வைத்து அவருடைய மகன் கதறி அழுதார்.

Update: 2019-09-15 22:15 GMT
திருவெறும்பூர்,

புதுக்கோட்டை மாவட்டம் களமானூர் மேலப்பட்டியை சேர்ந்த ராமைய்யாவின் மனைவி மல்லிகா (வயது 48). மகன் சதீஷ் (22). இவர்கள் இருவரும் லால்குடி பகுதியில் நடந்த உறவினர் வீட்டு காதணி விழாவில் கலந்துகொள்ள, மொபட்டில் நேற்று காலை புறப்பட்டனர்.

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் எம்.ஐ.டி. சோதனைச்சாவடி அருகே மொபட் வந்தபோது, திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற மினி லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மல்லிகா தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். அதிர்ஷ்டவசமாக சதீஷ் உயிர் தப்பினார்.

கதறி அழுத மகன்

2 மணி நேரத்துக்கும் மேலாக அந்த பெண்ணின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் எதுவும் வரவில்லை. இதனால், தனது கண்முன்னே தலைநசுங்கி இறந்த தாயின் உடலை மடியில் போட்டு, சதீஷ் சுமார் 2 மணி நேரமாக கதறினார். இது அப்பகுதியில் சென்ற அனைவரின் கண்களையும் நனைய வைத்தது. அதன்பின்னர் சதீஷ் மயக்கநிலை அடைந்தார்.

இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்த மல்லிகாவின் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள், சாலை விபத்திற்கு காரணம் போலீசாரின் அஜாக்கிரதை தான் என்றும், சாலையில் வைத்துள்ள தடுப்பு கம்பிகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தால் சாலையில் தடுப்பு இருப்பது தெரிந்திருக்கும் என்றும் குற்றம் சாட்டினார்கள்.

பரபரப்பு

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த நவல்பட்டு போலீசார் மல்லிகாவின் உறவினர்களை திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக அமர்ந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை அவரது உறவினர்கள் சமரசம் செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு வந்த ஆம்புலன்சில் மல்லிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற மினி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்