திம்மாச்சிபுரம் கனகதோணி அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

திம்மாச்சிபுரம் கனகதோணி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2019-09-15 22:30 GMT
லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே திம்மாச்சிபுரத்தில் புகழ்பெற்ற கனக தோணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் தேரோட்டம் கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சாமிக்கு பல்வேறு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி முதலில் அலங்கரிக்கப்பட்ட தேரில் கனகதோணி அம்மனை எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை தோளில் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக வந்தனர்.

அப்போது வீடுகளின் முன்பு பக்தர்கள் கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் ஒவ்வொரு வீதியிலும் கனகதோணி அம்மனுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் லாலாபேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை லாலாபேட்டை போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்