பேரளம் அருகே வாய்க்காலில் கார் பாய்ந்தது பெண்கள் உள்பட 8 பேர் காயம்

பேரளம் அருகே வாய்க்காலில் கார் பாய்ந்து பெண்கள் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-09-15 22:15 GMT
நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கதிராமங்கலம் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது 60). இவருடைய உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக திருவாரூர் அருகே உள்ள கானூருக்கு உறவினர்களுடன் நேற்று முன்தினம் இரவு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சண்முகசுந்தரம் மகன் மனோஜ் (24) என்பவர் ஓட்டினார். திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் சுரக்குடி அருகே சென்றபோது ஒரு புளியமரத்தில் கார் மோதி, மூங்கில்குடி வடிகால் வாய்க்காலில் பாய்ந்தது.

8 பேர் காயம்

இதில் காரில் பயணம் செய்த சித்ரா (39), அன்பரசி (60), கீதா (45), லெட்சுமி (78), சகீம் (16), கணபதி, சரவணன் (24), டிரைவர் மனோஜ் ஆகிய 8 பேரும் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாய்க்காலில் குறைவான தண்ணீர் சென்றதால் 8 பேரும் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும் செய்திகள்