பள்ளிபாளையம் அருகே, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் - காவிரி ஆற்றில் மிதந்து வந்ததால் பரபரப்பு

பள்ளிபாளையம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் காவிரி ஆற்றில் மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-15 22:15 GMT
பள்ளிபாளையம், 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள நாட்டாகவுண்டன்புதூர் காவிரி ஆற்றில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கரை ஒதுங்கியது. தலை துண்டிக்கப்பட்டு, அழுகிய நிலையில் அவரது உடல் இருந்தது. இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், அவர்கள் இது குறித்து பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

ஆனால் அவரது தலை துண்டிக்கப்பட்டு இருந்ததாலும், உடல் அழுகிய நிலையில் இருந்ததாலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

இறந்தவரின் வலது கையில் புனிதா, கவி என்ற பெயர்கள் பச்சை குத்தப்பட்டுள்ளன. அவரை மர்ம நபர்கள் யாரேனும் கொலை செய்து, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக தலையை துண்டித்து காவிரி ஆற்றில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதைத்தொடர்ந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் மிதந்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்