சிறுமியை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

சிறுமியை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்புகூறியது.

Update: 2019-09-16 23:00 GMT
கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகைரோடு மோத்தேபாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 22). இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந்தேதி மாலை 6 மணியளவில் உறவினர் ஒருவரின் வாழைத்தோட்டத்தில் தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டு இருந்தார்.

தினேஷ்குமார் ஆபாச படம்பார்த்ததை அங்கு வந்த 16 வயது சிறுமி பார்த்துள்ளார். அந்த சிறுமி தினேஷ்குமாருக்கு தங்கை முறையாகும். இந்த நிலையில் அந்த சிறுமி நீ செல்போனில் இதுபோன்ற ஆபாச படங்களை பார்ப்பதை உறவினர்களிடம் சொல்லப்போவதாக கூறியுள்ளார். இதற்கு தினேஷ்குமார் அந்த சிறுமியிடம் ஆபாச படத்தை காட்டி உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமி உடனே அங்கு இருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் தினேஷ்குமார் சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி தினேஷ்குமாரை கைதுசெய்தனர்.

இதுதொடர்பான வழக்குவிசாரணை கோவை மகிளாகோா்ட்டில் நடந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் தினேஷ்குமார் சிறுமியை கற்பழித்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. எனவே அவருக்கு சிறுமியை கற்பழித்ததற்காக போக்சோசட்டத்தின் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும், கொலை செய்ததற்காக ஒரு ஆயுள் தண்டனையும் என இரட்டை ஆயுள் தண்டனையும், சிறுமியை கற்பழித்து கொலைசெய்து தடயத்தை மறைத்ததற்காக 7ஆண்டு சிறையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்புவழங்கினார். அரசு தரப்பில் வக்கீல் ஆர்.சரோஜினி ஆஜரானார்.

சிறுமியை கற்பழித்து கொலைசெய்த வழக்கில் வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகிளாகோா்ட்டு உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்