சாணார்பட்டி அருகே, லாரி மோதி அரசு பள்ளி ஆசிரியர் பலி

சாணார்பட்டி அருகே லாரி மோதி அரசு பள்ளி ஆசிரியர் பலியானார்.

Update: 2019-09-16 22:45 GMT
கோபால்பட்டி, 

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 39). இவர், சாணார்பட்டி அருகே உள்ள வி.குரும்பபட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை சக்திவேல் தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

திண்டுக்கல்-நத்தம் சாலையில் கொசவப்பட்டி அருகே சென்றபோது முன்னால் சென்ற டிப்பர் லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சக்திவேல் சாலையில் விழுந்தார். சக்திவேல் ஹெல்மெட் அணிந்திருந்தார்.

ஆனால் ஹெல்மெட் தனியாக கழன்று விழுந்ததால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த ஆசிரியருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்