மதுபோதையில் தகராறு: கல்லால் தாக்கி தொழிலாளி கொலை நண்பர் கைது

புதுக்கடை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்கின் கீழ் நண்பர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-09-16 23:00 GMT
புதுக்கடை,

புதுக்கடை அருகே காப்புக்காடு மாராயபுரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 47), தொழிலாளி. இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றார். குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் அதே பகுதியை சேர்ந்த சாஜின் (22) என்பவருடன் வேலைக்கு சென்று வந்தார். இதில் இருவரும் நண்பர்களாக பழகினர். வேலை முடிந்த பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம்.

கடந்த 11-ந் தேதி இரவு 9 மணி அளவில் வழக்கம்போல இருவரும் குமாரபுரம் கால்வாய் அருகே அமர்ந்து மது குடித்தனர்.

கல்லால் தாக்கினார்

அப்போது அவர்கள் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சாஜின் அருகில் கிடந்த கல்லால் குமாரின் தலையில் பலமாக தாக்கினார். படுகாயம் அடைந்த குமார் அருகில் இருந்த கால்வாயில் விழுந்தார். உடனே சாஜின் அங்கிருந்து தப்பி சென்றார். கால்வாயின் கரை பகுதியில் விழுந்த குமார் இரவு முழுவதும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

மறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே புதுக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பரிதாப சாவு

இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு குமார் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சாஜின் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் குமாரை கல்லால் தாக்கியது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்லால் தாக்கப்பட்ட தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்