நாகர்கோவிலில் பரபரப்பு மதுக்கடை அமைக்க கடும் எதிர்ப்பு மதுபாட்டில்களுடன் வந்தவாகனத்தை பெண்கள் முற்றுகை

நாக்கோவிலில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மதுபாட்டில்களுடன் வந்த வாகனத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-16 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் சவேரியார் கோவில் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் டி.வி.டி காலனி அருகே ஒரு தனியார் கட்டிடத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கடைக்கு மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு வாகனம் வந்தது. மதுக்கடை அமைக்கப்பட்ட தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் உடனே அங்கு திரண்டனர். மதுக்கடை அமைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்த பொதுமக்கள், மதுபாட்டில்கள் ஏற்றி வந்த வாகனத்தையும் முற்றுகையிட்டனர். மதுக்கடை முன்பாக அமர்ந்தும் கோஷங்களை எழுப்பினர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கலைந்து சென்றனர்

இதைத் தொடர்ந்து கோட்டார் போலீசார் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் மதுபாட்டில்களுடன் வந்த வாகனம் திரும்பி சென்றது. கடையையும் திறக்கவில்லை. அதன்பிறகு இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்க பொதுமக்கள் முடிவு செய்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்