2-வது திருமணம் செய்துகொண்டு தலைமறைவான கணவரை கண்டுபிடித்து தரும்படி: முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கர்ப்பிணி கோரிக்கை

2-வது திருமணம் செய்துகொண்டு தலைமறைவான கணவரை கண்டுபிடித்து தரும்படி கர்ப்பிணி பெண், முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-09-16 23:00 GMT
துமகூரு,

கர்நாடக மாநிலம் துமகூருவை சேர்ந்தவர் திவ்யா. இவரும் அதே பகுதியை சேர்ந்த பிரதாப் என்பவரும் காதலித்து வந்தனர். திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து திவ்யாவும், பிரதாப்பும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது திவ்யா 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் பிரதாப் சிக்கமகளூருவை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்து வசித்து வருவதாக கூறப்படுகிறது. பிரதாப், முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் திவ்யா சமூகவலைத் தளங்களில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அதில், நானும், பிரதாப்பும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டோம்.

தற்போது நான் 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். ஆனால் பிரதாப் 2-வது திருமணம் செய்துகொண்டு தலைமறைவு ஆகிவிட்டார்.

தற்போது நான் யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாக வசிக்கிறேன். எனவே எனது கணவரை கண்டுபிடித்து தன்னுடன் சேர்த்துவைக்க முதல்-மந்திரி எடியூரப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்