தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்து விபத்து; 25 மாணவர்கள் காயம்

ராமநத்தம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 மாணவர்கள் காயமடைந்தனர்.

Update: 2019-09-16 23:00 GMT
ராமநத்தம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் இருந்து மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு தனியார் கல்லூரி பஸ் ஒன்று ராமநத்தம் அருகே தொழுதூருக்கு சென்று கொண்டிருந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயணம் செய்தனர். ராமநத்தம் அடுத்த தொழுதூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

25 பேர் காயம்

இதில் பஸ்சில் பயணம் செய்த கார்மாங்குடியை சேர்ந்த மணிகண்டன் மனைவி மகாலட்சுமி (வயது 18), வெண்கரும்பூர் மகேந்திரன் மகள் மகாலட்சுமி(18), கருவேப்பிலங்குறிச்சி சுந்தரபாண்டியன் மகள் சாருமதி(21), பெண்ணாடம் சுப்பிரமணியன் மனைவி சுமிதா(19), ஆவினங்குடி சக்திவேல் மனைவி அருணா (18), சிவக்குமார் மகள் சிவரஞ்சனி (20), அபிநயா, சுடலி, விஸ்வநாதன், மணிமேகலை, ராமகிருஷ்ணன், பிரியா உள்பட 25 மாணவ-மாணவிகள் காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தொழுதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக மகேந்திரன் மகள் மகாலட்சுமி, சாருமதி, சுமிதா, அருணா, சிவரஞ்சனி ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்