திருப்பத்தூர் அருகே, கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை - சப்-கலெக்டர் விசாரணை

திருப்பத்தூர் அருகே கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சப்-கலெக்டர் பிரியங்கா விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2019-09-16 22:00 GMT
திருப்பத்தூர், 

திருப்பத்தூர் தாலுகா குரிசிலாப்பட்டு அருகே உள்ள மல்லாண்டியூரை சேர்ந்தவர் சென்றாயன் (வயது 25), வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி வெள்ளையகவுண்டனூரை சேர்ந்த வரலட்சுமிக்கும் (19) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சென்றாயன் தினமும் மது அருந்திவிட்டு வருவதால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த வரலட்சுமி சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள 25 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி வரலட்சுமியின் உடலை மீட்டனர். குரிசிலாப்பட்டு போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரலட்சுமிக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால், திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்