விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விருத்தாசலம் விருத்த கிரீஸ்வரர் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2019-09-17 22:30 GMT
விருத்தாசலம், 

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் பகுதிகளில் கோவிலின் கலை அழகையும், கோவிலின் கட்டிட அழகையும் பாதிக்கும் வகையில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் முகப்பு பகுதி மற்றும் சன்னதி வீதியில் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதை அகற்றுவது தொடர்பாக விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் விருத்தகிரீஸ்வரர் கோவில் முன்பு ஆக்கிரமித்து, வைக்கப்பட்ட கடைகளை அகற்ற கடலூர் உதவி ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து கடலூர் உதவி ஆணையர் பரணிதரன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். அங்கு கோவில் அருகில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 4 கடைகளை அப்புறப்படுத்தினர். முன்னதாக அசம்பாவித சம்பவங்களை தடுக்க விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் விருத்தாசலம் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர். 

மேலும் செய்திகள்