ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

ஜெருசலேம் புனித பயணம் செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-17 22:15 GMT
ராமநாதபுரம்,

தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019-20-ம் ஆண்டில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது.

இந்த பயணம் செப்டம்பர் முதல் மார்ச் 2020 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்பப் படிவம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.bc-m-b-c-mw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயனடையலாம். எனவே விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20 என்று குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு வருகிற 30-ந்தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சிறுபான்மையினர் நல இயக்குனரகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகள்