அரசு விடுதி காப்பாளரை கண்டித்து கல்லூரி மாணவர்கள் மறியல் செய்ய முயற்சி

பெரம்பலூரில் விடுதி காப்பாளரை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

Update: 2019-09-18 22:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அரசு கல்லூரி மாணவர்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அந்த விடுதியில் உள்ள மாணவர்கள் சிலர், கேக் வெட்டி ஒரு மாணவரின் பிறந்த நாள் விழாவை கொண்டாட தொடங்கினர். அப்போது மாணவர்களில் சிலர் கேக்கை வெட்டுவதற்கு முன் அதனை எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் சமாதானம் அடைந்தனர். இதை அறிந்த விடுதி காப்பாளர் ஜீவரத்தினம் மாணவர்களை கண்டித்தாராம். இதனால் மாணவர்களுக்கும், விடுதி காப்பாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், விடுதி காப்பாளர் 3 மாணவர்களை குச்சியால் அடித்ததாக கூறப்படுகிறது.

மறியலுக்கு முயற்சி

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் விடுதி காப்பாளரை கண்டித்து நேற்று காலை விடுதி முன்பு உள்ள பெரம்பலூர்-துறையூர் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மஞ்சுளா ஆகியோர் அங்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்