பவானி அருகே விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை மனைவி பிரிந்து சென்ற துயரத்தில் விபரீத முடிவு

பவானி அருகே மனைவி பிரிந்து சென்ற துயரத்தில் விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-09-19 22:15 GMT
பவானி,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குறிச்சி மெயின்ரோட்டில் வசித்து வருபவர் ரவி. அவருடைய மகன் தயாள பிரபு (வயது 28). இவர் பவானி சொக்காரம்மன் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தயாளபிரபுவுக்கும் குறிச்சி பகுதியை சேர்ந்த பிரியா (25) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன்பின்னர் 2 பேரும் குறிச்சியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் திருமணம் ஆன 2 மாதங்களிலேயே தயாளபிரபுவுக்கும் பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பிரியா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தற்கொலை

இதன் காரணமாக தயாளபிரபு மனம் உடைந்து காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற அவர் நிறுவனம் முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தயாளபிரபு இறந்தார். இதுகுறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்