ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

Update: 2019-09-20 22:15 GMT
விழுப்புரம், 

பிரதமரின் தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்கிட மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணி நேற்று காலை நடைபெற்றது.

கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் முடிவடைந்தது. இதில் மகளிர் சுயஉதவிகுழு வினர், சுகாதார ஊக்குனர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். விழிப்புணர்வு ரதம், கோலியனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், மகளிர் திட்ட இயக்குனர் ஈஸ்வரன், ஊரக வளர்ச்சித்துறை உதவி திட்ட அலுவலர் செந்தில்வடிவு, கண்காணிப்பாளர் சுமதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர், ஆலோசகர் சார்லஸ்விகாஸ் மற்றும் துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்