பல்லடம் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திருப்பூர் மாநகராட்சியில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு

திருப்பூர்- பல்லடம் ரோட்டில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாநகராட்சி அலுவலகத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு அளித்தார்.

Update: 2019-09-20 22:45 GMT
திருப்பூர்,

தனியார் டி.வி. சார்பில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூருக்கு வந்தார். இந்நிலையில் திருப்பூரில் உள்ள பல்லடம் ரோட்டில் சாலை விதிகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து டிராபிக் ராமசாமி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தி்ல் என்ஜினீயர் ரவியிடம் நேற்று ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பல்லடம் ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைபாதையை அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

இந்த நடைபாதையை ஆக்கிரமித்து அதில் இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் போன்றவற்றை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும், பொதுமக்கள் இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக சாலையில் நடந்து வருவதால் விபத்தையும் சந்தித்து வருகிறார்கள்.

இதுபோல் பொதுமக்கள் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு செல்ல நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் சில மையத்தடுப்புகளை அகற்றி ரோட்டை கடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி பல்லடம் ரோட்டில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடமையை செய்ய தவறிய மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர் ஆகியோர் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகவும் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

இந்த ஆக்கிரமிப்பு தொடர்பான புகைப்படங்களின் தொகுப்பையும் அவர் தயார் செய்து வைத்துள்ளார். முன்னதாக பல்லடம் ரோட்டில் ஒரு வழிப்பாதையில் வந்த ஆட்டோவை போக்குவரத்து போலீசாரிடம் பிடித்து கொடுத்து அதன் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்க செய்தார்.

மேலும் செய்திகள்