திருப்பனந்தாள் அருகே, மின்னல் தாக்கி கணவன், மனைவி உள்பட 4 பேர் காயம்

திருப்பனந்தாள் அருகே மின்னல் தாக்கி கணவன், மனைவி உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-09-22 22:45 GMT
திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே அணைக்கரை விநாயகன் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது50). விவசாயி. இவருக்கு சொந்தமான 20 ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று கரும்பு தோட்டத்தில் அன்பழகன் மற்றும் அவரது மனைவி பானுமதி(40), அதே பகுதியைச் சேர்ந்த மணி மனைவி கொளஞ்சி அம்மாள்(58), மாரிமுத்து மகள் அனுப்பிரியா(18)  ஆகிய 4 பேரும் கரும்பு தோகைகளை அறுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. இதனால் அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு இடத்தில் நிற்பதற்காக சென்று கொண்டிருந்த போது 4 பேரையும் மின்னல் தாக்கியது. 

இதில் காயம் அடைந்த அன்பழகன், அவரது மனைவி பானுமதி, கொளஞ்சி அம்மாள், அனுபிரியா ஆகிய 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து அவர்களை மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்