நத்தம் அருகே, செல்போன் கடையில் திருட்டு

நத்தம் அருகே செல்போன் கடையில் செல்போன்கள், பணம் திருடப்பட்டது.

Update: 2019-09-22 22:30 GMT
நத்தம், 

நத்தம் அருகே உள்ள வத்திபட்டியை சேர்ந்தவர் பூமிராஜ் (வயது 32). இவர் அப்பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவர், வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு வேளையில் கடையின் ஜன்னல் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.

பின்னர் கடையில் வைத்திருந்த செல்போன்கள் மற்றும் பணத்தை திருடி கொண்டு தப்பி சென்றனர். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க பூமிராஜ் வந்தார். அப்போது கடையின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது 8 செல்போன்கள், சிம்கார்டு, உதிரி பாகங்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் பூமிராஜ் புகார் செய்தார். அதன்பேரில் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் செல்போன் கடையில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் கடையில் செல்போன்கள், பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்