கோத்தகிரி அருகே, தந்தையை கொன்ற மகன் கைது

கோத்தகிரி அருகே தந்தையை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-09-24 23:00 GMT
கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி நீர்க்கண்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 80). இவர் அதே பகுதியில் கோழி இறைச்சிக்கடை நடத்தி வந்தார். இவரது மகன் சின்னபாண்டி(40). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இதற்கிடையில் சின்னபாண்டி மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். மேலும் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து, குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சின்னபாண்டி மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த தனது தந்தையான பாண்டியனிடம் அவர் தகராறில் ஈடுபட்டார். மேலும் உருட்டு கட்டையால் அவரை தலையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சோலூர்மட்டம் போலீசுக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பாண்டியனின் உடலை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் தந்தையை கொலை செய்த சின்னபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்