க.பரமத்தி அருகே விபத்தில் 2 பேர் சாவு: இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் மறியல்

க.பரமத்தி அருகே நடந்த விபத்தில் 2 பேர் இறந்ததால், அவர்களது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-26 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்டம் க.பரமத்தி காருடையாம்பாளையத்திலுள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கொசூருக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கரூர்-கோவை தேசியநெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த அரசு பஸ் ஒன்று வேன் மீது மோதியது. இதில் வேனில் இருந்த பெண் தொழிலாளி கொசூரை சேர்ந்த சினேகா (வயது 20) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வேன் டிரைவர் முருகன் சிகிச்சைக்காக கோவையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். காயமடைந்தவர்க ளுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை மறியல்

இதற்கிடையே கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த சினேகாவின் உடலை பார்ப்பதற்காக நேற்று காலை அங்கு உறவினர்கள் திரண்டனர். பின்னர் விபத்தில் இறந்த சினேகா, டிரைவர் முருகன் குடும்பத்திற்கு அவர்கள் வேலை பார்த்த நிறுவனம் சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ வசதி அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடம் முன்புள்ள சாலையில் சினேகாவின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த கரூர் டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்