திருமங்கலம் அருகே, காதலிக்க மறுத்த 14 வயது மாணவியை எரித்துக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

காதலிக்க மறுத்த 14 வயது மாணவியை எரித்துக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

Update: 2019-09-26 22:30 GMT
மதுரை, 

மதுரை திருமங்கலத்தை அடுத்த நடுக்கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 28). அதே பகுதியில் ஒரு ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 14 வயது மாணவியை காதலிக்கும்படி வற்புறுத்தினார். பலமுறை இதேபோல தொந்தரவு செய்தார்.

இதுகுறித்து அந்த மாணவி, தனது பெற்றோர் மூலம் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் 16.2.2018 அன்று ஜாமீனில் வெளியே வந்த அவர், மாணவியை பழிவாங்க திட்டமிட்டார். அன்று மாலை 4.45 மணி அளவில் மாணவி வகுப்பு முடிந்தவுடன், பள்ளியில் இருந்து வெளியில் வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த பாலமுருகன், “எனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது” என்று கூச்சலிட்டுக்கொண்டே, தான் வைத்திருந்த மண்எண்ணெயை மாணவி மீது ஊற்றி தீ வைத்தார்.

இதில் உடல் கருகி பலத்த காயம் அடைந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து, பாலமுருகனை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இதற்கிடையே ஏற்கனவே அவர் மீது நிலுவையில் இருந்த வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால் கடந்த ஓராண்டாக சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்தநிலையில் மாணவியை எரித்து கொலை செய்த வழக்கில், பாலமுருகன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக நீதிபதி புளோரா தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்