ஊத்துக்கோட்டை அருகே ரூ.14 லட்சம் கையாடல் செய்த பள்ளிக்கூட கணக்காளர் கைது

ஊத்துக்கோட்டை அருகே ரூ.14 லட்சம் கையாடல் செய்த பள்ளிக்கூட கணக்காளர் கைது செய்தனர்.

Update: 2019-09-27 22:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டை அருகே உள்ள வட மதுரை, எர்ணாகுப்பம் பகுதியில் தனியார் உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியை கவுஷர் (வயது 43) என்பவர் நிர்வாகம் செய்து வருகிறார். அந்தப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன்(35) என்பவர் கணக்காளராக கடந்த 4 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வந்தார். இதனைத் தொடர்ந்து, ஜனார்த்தனன் பள்ளிக்கட்டணம் 14 லட்சத்து 35 ஆயிரத்து 691 ரூபாயை கையாடல் செய்து விட்டு தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கவுஷர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணப்பன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜனார்த்தனனை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டை அருகே தலைமறைவாக இருந்த ஜனார்த்தனனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்