மகன்கள் 2-வது திருமணம் செய்து வைக்காததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை - போலீசார் விசாரணை

கச்சிராயப்பாளையம் அருகே மகன்கள் 2-வது திருமணம் செய்து வைக்காததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-09-27 22:00 GMT
கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே சாவடிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 55). தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். முஸ்தபாவின் மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் இவர் தனது மகன்களிடம் தனக்கு 2-வது திருமணம் செய்து வைக்கும்படி கூறி வந்துள்ளார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று அவர் தனது மகன்களிடம் 2-வது திருமணம் செய்து வைக்கும்படி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு அவர்கள், இத்தனை வயதுக்கு பிறகு உங்களுக்கு எதற்கு 2-வது திருமணம் என கூறி, மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட முஸ்தபா சம்பவத்தன்று மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் தீப்பற்றி எரிந்ததில் உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முஸ்தபா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்