திருப்புவனம் அருகே வாலிபர் வெட்டி கொலை

திருப்புவனம் அருகே வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2019-09-29 22:45 GMT
திருப்புவனம்,

திருப்புவனத்தை அடுத்த கலியாந்தூரில் உள்ள டாஸ்மாக்கடை அருகே அதே ஊரை சேர்ந்த அழகிச்சி என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீடு கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் மாடி பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டும், செங்கற்களால் தாக்கியும் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து நெல்முடிக்கரை கிராம நிர்வாக அலுவலர் ஜெயலெட்சுமி திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாதன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. பிணமாக கிடந்தவர் மாநிறம் உடையவராகவும், கருப்பு நிற பேண்ட், ஊதா நிற சட்டையும் அணிந்திருந்தார். மேலும் துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டு, அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கலியாந்தூர் மெயின் ரோடு வரை சென்று நின்று விட்டது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலை செய்யப்பட்ட நபர் எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்