ரெயில்வே ஊழியர்கள் போராட்டம்

நாகர்கோவில் ரெயில் நிலையம் முன் நேற்று எஸ்.ஆர்.எம்.யு., ஏ.ஆர்.எம். ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் நடந்தது.

Update: 2019-09-30 22:45 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் ரெயில் நிலையம் முன் நேற்று எஸ்.ஆர்.எம்.யு., ஏ.ஆர்.எம். ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் நடந்தது. குழித்துறையில் கடந்த 25–ந்தேதி தண்டவாள பராமரிப்பு பணியில் ரெயில்வே ஊழியர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் ஜெய்சந்த் மீனா, கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மதுசூதனன் ஆகியோர் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த ரெயில் மோதியதில் 2 பேரும் பலியானார்கள். இதே போல கொச்சுவேலியில் ஒரு ஊழியரும், திருவனந்தபுரத்தில் ஒரு ஊழியரும் ரெயில் மோதி இறந்தனர். இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், அவர்களது உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதற்கு எஸ்.ஆர்.எம்.யு. கிளை தலைவர் சுதர்சனன் தலைமை தாங்கினார். பால்பாண்டியன், பேராட்சிசெல்வன், சத்தியராஜ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

முன்னதாக, பலியான 4 பேருக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரெயில்வே ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டு பலியான ஊழியர்களின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் செய்திகள்