கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வலியுறுத்தி ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு

கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வலியுறுத்தி ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-01 23:15 GMT
ஈரோடு,

சென்னிமலை, கடத்தூர், கோபி, அம்மாபேட்டை ஆகிய போலீஸ் நிலைய எல்லைகளுக்குள் சிலர் போலி ஆவணங்கள் கொடுத்து செல்போன் சிம்கார்டுகள் வாங்கினார்கள். இதுகுறித்த புகார்களின் பேரில் கடந்த 2015-ம் ஆண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதுதொடர்பாக மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த ரூபேஸ், வீரமணி, கண்ணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் வீரமணி, கண்ணன் ஆகியோர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ரூபேஸ் கேரள மாநிலம் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர்கள் 3 பேர் மீதும் ஈரோடு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி உமாமகேஸ்வரி வழக்கை விசாரித்தார். அப்போது ரூபேஸ், வீரமணி, கண்ணன் ஆகிய 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

அதன்பின்னர் மாவோயிஸ்டுகள் 3 பேரையும் போலீசார் கோர்ட்டுக்கு வெளியே அழைத்து வந்தனர். அப்போது அவர்கள், கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தரவேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் 3 பேரும் சிறைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்