தடுப்பு கம்பியில் மோட்டார்சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி

கொடைரோடு அருகே தடுப்பு கம்பியில் மோட்டார்சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2019-10-01 21:45 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் நிஷாந்த் தரணி (வயது 20). இவர், திண்டுக்கல் ஆர்.வி.எஸ். கல்லூரியில் 3-வது ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு இவர், தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு சென்றுவிட்டு, திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில், கொடைரோடை அடுத்த பள்ளப்பட்டி பிரிவு அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். உயிருக்கு போராடிய அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நிஷாந்த் தரணி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர், தனியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்