உண்டு உறைவிட பள்ளி மாணவி மர்ம சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

ஓமலூர் அருகே உண்டு உறைவிட பள்ளி மாணவி மர்மமாக இறந்தார். அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2019-10-02 23:00 GMT
ஓமலூர்,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். இவருடைய மனைவி பாப்பா. இவர்களுடைய மகள் இளவரசி(வயது 13). இவர் ஓமலூர் அருகே உள்ள கணவாய்புதூர் உண்டு உறைவிட பள்ளி விடுதியில் தங்கியிருந்து 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அந்த மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி அவரை விடுதி ஊழியர்கள் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த மாணவி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இளவரசியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அந்த மாணவியின் பெற்றோர் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறினர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மாணவியின் உடல் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப் பட்டது.

உடலை வாங்க மறுப்பு

ஆனால் மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர்கள், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதால் அவருடைய உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அப்போது அதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் செய்திகள்