கடையநல்லூரில் இளம்பெண் தீக்குளித்து சாவு

கடையநல்லூரில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-10-02 22:45 GMT
கடையநல்லூர், 

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அம்பேத்கர் தெரு மீன் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் கடையநல்லூர் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி பிச்சம்மாள் (வயது 26). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பிச்சம்மாள் நேற்று காலை வீட்டில் இருந்தபோது தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதனால் அவர் அலறி துடித்து கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதில் உடல் கருகி பலத்த தீக்காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பிச்சம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்