கொடுமுடி அருகே, காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தியவர் கைது - டிராக்டர் பறிமுதல்

கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-10-03 22:15 GMT
கொடுமுடி, 

கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார்பாறையில் ஒரு தோப்பு வழியாக காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தார்.

அப்போது ஆவுடையார்பாறையை சேர்ந்த வேலுச்சாமி என்பவருடைய தோட்டம் வழியாக மணல் ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் வந்தது.

உடனே போலீசார் டிராக்டரை நிறுத்தி அதை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர், கரூர் மாவட்டம் தென்னிலையை சேர்ந்தவர் ராமசாமி (வயது 38) என்பதும், வேலுச்சாமியுடன் சேர்ந்து காவிரி ஆற்றில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தியதும் தெரிந்தது. இதை தொடர்ந்து ராமசாமியை போலீசார் கைது செய்தார்கள். மணலுடன் டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தலைமறைவாக உள்ள வேலுச்சாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்