திருவெண்ணெய்நல்லூர் அருகே, மரத்தில் மோதி ஏரிக்குள் பாய்ந்த அரசு விரைவு பஸ்

திருவெண்ணெய்நல்லூர் அருகே மரத்தில் மோதிய அரசு விரைவு பஸ், ஏரிக்குள் பாய்ந்தது.

Update: 2019-10-04 23:00 GMT
அரசூர், 

திருச்சியில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை அரசு விரைவு பஸ் புறப்பட்டது. பஸ்சை வந்தவாசி தாலுகா போரூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 42) என்பவர் ஓட்டிச்சென்றார்.

இந்த பஸ் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த மடப்பட்டில் உள்ள ஏரி அருகே வரும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடி சாலையோரமாக இருந்த மரத்தில் மோதியது. மோதிய வேகத்தில் அந்த பஸ், ஏரிக்குள் பாய்ந்தது. ஆனால் ஏரியில் பஸ் கவிழாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மரத்தின் மீது மோதியதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது.

மேலும் இந்த விபத்தில் பஸ் டிரைவர் சுரேஷ் மற்றும் பஸ்சில் பயணம் செய்த தர்மபுரி நவலை பகுதியை சேர்ந்த பெருமாள் (43) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உடனே இவர்கள் இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு வாகனத்தை வரவழைத்து ஏரிக்குள் பாய்ந்த அரசு விரைவு பஸ்சை வெளியே கொண்டு வந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்