மரக்காணம் அருகே பரிதாபம், பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்: தந்தை-மகன் சாவு

மரக்காணம் அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தந்தை- மகன் உயிரிழந்தனர். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-10-04 22:45 GMT
விழுப்புரம், 

மரக்காணம் அருகே உள்ள கந்தாடு பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 70), இவருடைய மகன் விஜயகுமார் (28). இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை மாசிலாமணி, அவரது மகன் விஜயகுமார் மற்றும் உறவினரான அதே பகுதியை சேர்ந்த ரவீந்திரன் (24) ஆகிய 3 பேரும் சொந்த வேலை காரணமாக ஒரு மோட்டார் சைக்கிளில் மரக்காணத்திற்கு சென்றனர்.

பின்னர் 3 பேரும் அங்கிருந்து மீண்டும் கந்தாடுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை விஜயகுமார் ஓட்டிச்சென்றார். இவர்கள் மரக்காணம் - திண்டிவனம் சாலையில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது பக்கிங்காம் கால்வாய் பாலத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் மாசிலாமணி, அவரது மகன் விஜயகுமார் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த ரவீந்திரன், புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்