குமரி மாவட்டத்தில் பொருளாதார கணக்கெடுப்பு நடப்பது எப்போது? கலெக்டர் விளக்கம்

குமரி மாவட்டத்தில் பொருளாதார கணக்கெடுக்கும் பணி நடப்பது குறித்து கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2019-10-05 22:00 GMT
நாகர்கோவில்,

மத்திய அரசின் புள்ளி விவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சார்பில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி குமரி மாவட்டம் முழுவதும் இந்த மாதம்(அக்டோபர்) 2-வது வாரத்தில் இருந்து தொடர்ந்து நடத்தப்படும். 5 ஆண்டு திட்டம் மற்றும் அரசு துறைகளின் திட்ட பணிகளுக்கு தேவையான விவரங்களை சேகரிப்பதற்காக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் விவரங்கள் சேகரிக்கப்படும்.

இதில் 556 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 146 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பின் போது, தொழில் விவரம், உரிமையாளர், வயது, பாலினம், மதம், சமூகபிரிவு, பணியாளர்களின் எண்ணிக்கை, நிதி ஆதாரம் மற்றும் முதலீடு போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.

விவரங்கள் சேகரிப்பு

மேலும் பான் எண், தொலைபேசி எண், இ- மெயில், நிறுவன உரிமம் குறித்த விவரங்களும் சேகரிக்கப்படும். பொது மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அளிக்கும் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். விவரங்கள் சேகரிக்க வரும் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு சரியான புள்ளி விவரங்களை தயக்கமில்லாமல் தெரிவிப்பதோடு தகுந்த ஒத்துழைப்பும் வழங்குமாறு வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9445458090, 9445458157 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்